Friday, June 1, 2007

சிங்கள தேசத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின் வான் தாக்குதல்கள்














குறுகிய கால இடைவெளிக்குள் மூன்று வான் தாக்குதல்களை வான் புலிகள் நிகழ்த்தியுள்ளனர். இராணுவ - மற்றும் பொருண்மிய இலக்குகளே வான் புலிகளின் தாக்குதல்களுக் குள்ளாகியுள்ளன. கட்டுநாயக்க வான்தளமும் - பலாலிப் பெருந்தளமும் சிங்களத்தின் அதி உச்ச இராணுவ இலக்குகளாகும். இவை இரண்டும் அடுத்தடுத்து வெற்றிகரமாகத் தாக்கப்பட்டுள்ளன.

கொழும்பு எரிபொருள் சேமிப்புக் குதங்கள் மீதான வான் தாக்குதல்கள் சிங்களத்திற்கு பொருண்மிய நெருக்கடிகளை உண்டு பண்ணியுள்ளன. சிங்களத்தின் சுற்றுலாத்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. தமிழர்க்கெதிரான ஆக்கிரமிப்புப்போரின் அரசியல் - இராணுவ மற்றும் கட்டளை மையமான கொழும்புநகர் வான் புலிகளின் குண்டு வீச்சுக்களுடன் குழம்பிப் போயுள்ளது. பதட்டமும் - பீதியும் நிறைந்த இடமாக சிங்களத்தின் மைய பீடம் உருமாறியுள்ளது.

தமிழர் மீதான வான் தாக்குதல்களின் கோரத்தையும் அது தமிழர்களிடம் ஏற்படுத்தியுள்ள பீதியையும் சிங்கள தேசமும் அனுபவிக்கும் சூழல் பிறந்துள்ளது. தமிழரின் விடுதலையை வென்றெடுப்பதற்காக முப்படையின் அவசியத்தைத் தலைவர் பிரபாகரன் அடிக்கடி எடுத்துரைப்பார். தரைப்படை, கடற்படை, வான்படை என்ற அந்த முப்படையையும் இன்று அவர் உருவாக்கி அவற்றை வெற்றிகரமாகச் செயற்படுத்தி வருகின்றார். ஒவ்வொரு படைக் கட்டுமானத்தையும் நன்கு திட்டமிட்டு, கட்டியமைத்து, சரியான நேரத்தில் அவற்றை வெளிப்படுத்திக்காட்டும் தலைவரின் அற்புதமான தலைமைத்துவச் செயற்பாட்டை இன்று உலகமே வியந்து பாராட்டி வருகின்றது.

கிழக்கு நிலத்தைக் கைப்பற்றி - வடக்கில் ஒரு படைய நெருக்கடியைப் புலிகள் இயக்கத்திற்குக் கொடுத்துவருவதாக சிங்கள அரசு செய்த பரப்புரையை மூன்று வான் தாக்குதல்கள் மூலம் தகர்த்தெறிந்துள்ள தலைவர் அவர்கள், தமிழரின் விடுதலைப் போராட்டத்தை ஒரு பாச்சல் வளர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். புலிகளிடமுள்ளது இலகுரக - மிதவேக விமானங்கள். தம்மிடமுள்ளது சக்திவாய்ந்த - அதிவேகக் குண்டு வீச்சு விமானங்கள்.

உயர் தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் ஆயுதங்கள் என்றெல்லாம் சிங்கள அரசு பெருமைபேசி வந்தது. ஆயினும், அதிவேகங்களையும் - உயர் தொழில் நுட்பங்களையும் வான் புலிகளின் திறமையும், சாதுரியமும், அர்ப்பண உணர்வும் முறியடித்து வெற்றிவாகை சூடியுள்ளன என்பதே உண்மையாகும்.

No comments: