Tuesday, March 4, 2008

மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சி சபை தேர்தல்கள் - 2008

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 9 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில் தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர் திரு.வீ.ஆனந்தசங்கரி அவர்கள் விடுத்த வேண்டுகோளின் முழு வடிவம் கீழே உள்ளது.


மட்டக்களப்பு மாவட்ட தமிழ் அன்பர்கள் அனைவருக்கும்
தயவான வேண்டுகோள்.

அன்புடையீர்,

நான் அகிம்சை வழிமுறைகளில் உறுதியான நம்பிக்கை கொண்டவன். எனது 55 ஆண்டு அரசியல் வாழ்வும் அதன் வழி அமைந்ததே.

சகோதரப்படுகொலைகளும், அப்பாவிகள், புத்திஜீவிகள் ஆகியோரின் கொலைகளும் ஆரம்பித்ததன்; பின்னர் ஆயுதப்போராட்டத்தை முற்று முழுதாக நிராகரித்தேன். தமிழீழ விடுதலைப்புலிகள் தான் இந்த கலாச்சாரத்தின்; ஆரம்பகர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள் என்பதை நீங்களும் அறிவீர்கள். வெவ்வேறு இயக்கங்கள் கூட தங்களை புலிகளிடமிருந்து பாதுகாப்பதற்காக ஏதோ ஒரு அளவில் இக்கலாச்சாரத்திற்கு ஆட்பட்டது துரதிஸ்டமானதே.

கிழக்கில் வாழும் மக்கள் சுனாமிப் பேரழிவுகளாலும், யுத்தத்தின் தாக்கங்களாலும்; மிகப்பெரிய அழிவுகளையும், இழப்புக்களையும் சந்தித்து சொந்த இடங்களை விட்டு இடம்பெயர நேரிட்டது. கணிசமானோர் மீண்டும் தங்களின் ஊர்களுக்குத் திரும்பியிருந்தாலும் இன்னமும் நிம்மதியான, அமைதியான வாழ்வு கிட்டாது துன்பப்படுகிறார்கள். குறைந்த பட்ச அமைதிச் சூழல் உருவாக்கப்படாத நிலையிலும், ஆயுதக் காலச்சாரமும் முற்றாக ஒழிக்கப்படாத நிலையிலும் தேர்தல் உங்கள் மீது வலிந்து திணிக்கப்பட்டுள்ளது. எது எப்படி இருப்பினும் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்டுவதில் மக்களின் கருத்துக்களையும் அபிலாசைகளையும் வெளிப்படுத்த தேர்தல் ஒரு முக்கிய வழிமுறையாக இருப்பினும் இத்தேர்தல் மூலம் உருவாகும் சபைகள் நீங்கள் எதிர்நோக்கும் பிரமாண்டமான பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வைக் கண்டு விடும் என நான் நம்பவில்லை.

எவ்வாறாயினும் இங்கு தமிழ் மக்கள் தாம் ஒன்றாக ஒற்றுமையாக இருப்பதற்கு இத்தேர்தலில் வாக்களிப்பது தமிழ் மக்களின் கடமையாகும்.

வடபகுதி மக்கள் கடந்த காலத்தில் தமது தலைமையை என்றும் கிழக்கு மாகாணத்தின் மீது திணிக்கவில்லை. அதற்கு மாறாக தலைமையை பகிர்ந்து தான் வாழ்ந்து வந்திருக்கிறோம். தமிழன் நாட்டின் எப்பகுதியில் வாழ்ந்தாலும் தமிழனே. இதில் வடக்கென்ன? கிழக்கென்ன? “யாதும் ஊரே யாவரும் கேளிர்” இது எமது தாரக மந்திரமாக இருந்து வந்திருக்கிறது. எமக்குள் வேற்றுமைகள் வேண்டாம். தந்தைசெல்வா காலத்திலிருந்தே காலத்துக்குக்காலம் தமிழ் மக்களின் தலைமை வடக்கிலும் கிழக்கிலும் மாறி மாறி இருந்திருக்கிறது. வடக்கின் தலைமையை கிழக்கு மக்களும், கிழக்கின் தலைமையை வடபகுதி மக்களும் ஏற்று மதித்து பரஸ்பர உறவுடன் வாழ்ந்து வந்ததே வரலாறாகும். கிழக்கைச் சேர்ந்த கௌரவ இராசதுரை, அமரர்களான ஏகாம்பரம், இராசமாணிக்கம், இராசவரோதயம் போன்றோரின் தலைமையை வடபகுதி மக்கள் ஏற்று மதித்து வந்தார்கள். அதேபோலவே அமரர்களான தந்தைசெல்வா, சிவசிதம்பரம், அமிர்தலிங்கம் ஆகியோரின் தலைமையை கிழக்கு மக்கள் மதித்தும் ஏற்றும் வந்தனர். எனது அருமை நண்பன் சொல்லின் செல்வன் செ.இராசதுரை அவர்களையும் அவரது பேச்சாற்றலையும் வடபகுதி மக்கள்; தம் உள்ளத்தில் இன்றும் அழியாத நினைவுகளாக வைத்துள்ளனர். அதே போன்றே வடபகுதி தலைவர்களும்; உங்கள் உள்ளங்களில் காலத்தால் மாறாத இடம்பிடித்துள்ளனர்;.

பல்வேறு வகையிலும் இத் தேர்தலின் முடிவுகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன்.

வெவ்வேறு காலகட்டங்களில் ஆட்சியில் இருந்த அரசுகள் தமிழர்கள் மத்தியில் நிலவும் ஆயுதக் கலாச்சாரத்தையும், வன்முறைகளையும், தலைமைப் போட்டிகளையும் தமக்குச் சாதகமாகப் பாவித்து வந்திருக்கிறார்கள். இதே நிலை தொடரவேண்டுமா? தமிழ் மக்களின் உரிமைகளை அங்கீகரிப்பதை இழுத்தடிப்பதற்கான உபாயமாக அது கையாளப்பட்டு வந்திருக்கிறது.

கணவன்மாரை இழந்த அப்பாவி மனைவியர், மனைவிமாரை இழந்த துர்ப்பாக்கியமான கணவன்மார், அன்னை தந்தையரை இழந்து அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்கள், அனாதரவான முதியோர் என எமது சமூக வாழ்வு மிக அவலமானதாகியுள்ளது. அதுமட்டுமல்ல நாம் உற்றார் உறவினரை இழந்துள்ளோம். குடும்பங்கள் சிதைக்கப்பட்டு கணவர் ஒருநாட்டிலும் பிள்ளைகள் வெவ்வேறு நாடுகளிலும் வாழ்கின்றனர். நாம் சொத்து சுகங்களை இழந்து நிற்கிறோம்;. பிள்ளைகளின் கல்வியைப் பறித்து புத்தகம் இருந்த கைகளில் துப்பாக்கியைத் திணித்து போர்க்களத்தில் பலிகொடுக்கின்றனர். இங்கு சொத்துக்களை இழந்து ஓட்டாண்டிகளோர் பல்லாயிரம். போதியளவு நிலமிருந்தும் பயிர்செய்யமுடியாமலும், செய்ததை சந்தைப்படுத்தமுடியாமலும் நீளமான கடலிருந்தும் முறையான தொழில்புரியும் நிலைமை இல்லாததாலும் குட்டிச்சுவரான குடும்பங்கள் எத்தனையோ ஆயிரம். சுதந்திரமாக உழைத்து சம்பாதித்து தன்மானத்தோடு வாழ்ந்த மக்கள் இன்று கையேந்தி வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். வடக்கு கிழக்கு என்ற பேதமின்றி எம் அனைவரதும் நிலைமை இதுவேதான்.

வடக்கு கிழக்கில் வாழும் மக்கள் இந்த யுத்தம் மற்றும் வன்முறைகளால் அனுபவித்த துன்பங்கள் பிரதேசத்திற்கு பிரதேசம் வேறுபடவில்லை. ஒரே விதமான கஸ்டங்களையும் துன்பங்களையும் அனைத்துப் பகுதி; மக்களும் எதிர் நோக்கி நிற்கிறார்கள். ஏறக்குறைய 25 ஆண்டுகளாக வடக்கிலும் சரி ,கிழக்கிலும் சரி மக்கள் சுதந்திரமான ஒரு தேர்தலை சந்திக்கவில்லை. நடைபெற இருக்கும் தேர்தல் கூட சுதந்திரமான தேர்லாக நடைபெறாது போனால் கிழக்கு மாகாண மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கவில்லை என்றே உலகம் கூறும். 25 வருடங்களுக்கு மேல் சொல்ல முடியாத வேதனையை அனுபவித்து விட்ட மக்களுக்கு இனியாவது உண்மையான விடிவு ஏற்பட்டு விட்டதாக எண்ணக் கூடிய நிலை உருவாக வேண்டும். சுதந்திரமாக மக்கள் தம் வாக்குரிமையை உபயோகிக்க அனைவரும் வழியமைத்துக் கொடுக்கவேண்டும்.

எமது இனம் நிலப்பரப்பால் கூறுபடாமல் அனைத்து இன மக்களும் பயபீதியின்றி ஒற்றுமையாக வாழ்வதற்கான தேர்தலாகவும் இது அமைய வேண்டுமெனப் பிராத்திக்கிறேன்.

மேலும், இதனை நான் வெறுமனே ஒரு பிரதேச சபைத் தேர்தலாக மட்டும் கருதாது அடிப்படையில் வடக்கு-கிழக்கில் வாழும் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கின்ற வாக்கெடுப்பாகவே பார்க்கிறேன். 50 ஆண்டுகளுக்குப் பின்பும் சிறுபான்மை மக்களுக்கு ஏற்புடையதான ஒரு நியாயமான தீர்வை முன்வைத்து சிறுபான்மையினருக்கு விடிவுகாலம் ஏற்படுகிறது என்ற நம்பிக்கையை ஊட்டாது அந்தரத்தில் நிறுத்திய நிலையிலேயே இத்தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலைப்பாடே எமது ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இத்தேர்தலில் தமிழ்க் கட்சிகள் ஒன்றாக ஒரே அணியில் சுயேச்சைக்குழுவாக அப்பிள் பழ சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

தமிழ் மக்கள் அனைவரும் தமது அபிலாசைகளை பிரதிபலிப்பதற்கு அப்பிள் பழ சின்னத்திற்கே வாக்களிக்குமாறு உங்களை வேண்டிக் கொள்கிறேன்.


நன்றி

அன்புடன்

வீ.ஆனந்தசங்கரி,

தலைவர்,
தமிழர் விடுதலைக் கூட்டணி

Saturday, September 8, 2007

கையேற்க யாருமற்று குழந்தையும், மரணித்த தமிழ்த் தாயும்!

கிளிநொச்சி, பரந்தனைச் சேர்ந்த 21 வயதுடைய சுப்பிரமணியம் அனித்தா கடந்த 2007.08.12ஆம் திகதி மகப்பேற்றுக்காக கிளிநொச்சி அரசினர் பொது வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அவசர சிகிச்சைக்கென 2007.08.13ஆம் திகதி அனுராதபுரம் அரசினர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, 2007.08.16ஆம் திகதி மகப்பேற்றின் போது ஒரு குழந்தையை பெற்றெடுத்த அவ் இளம்தாய் இறந்து விட்டார்.

சுப்பிரமணியம் அனித்தாவின் குழந்தையையும் அவரது சடலத்தையும் கையேற்க யாரும் முன்வராத காரணத்தினால் குழந்தையும், சடலமும் வைத்தியசாலையிலேயே உள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

கர்ப்பிணியான சுப்பிரமணியம் அனித்தாவை மேலதிக சிகிச்சைக்காக அவரது கணவனும் அனித்தாவின் பெற்றோரும் ஓமந்தைச் சோதனைச் சாவடியால் வவுனியா கொண்டு செல்வதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அனுமதி (பாஸ்) கோரியபோது, அக் கற்பிணியுடன் உதவிக்குச் செல்ல எவருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அனுமதி வழங்க மறுத்ததனால் கூடவே செல்வதற்கு எவருமின்றி தனித்தே இப்பெண் வந்ததாக வைத்தியசாலைச் செய்திகள் கூறுகின்றன.

Thursday, September 6, 2007

அரசாங்கம் தென்பகுதி மக்களை ஏமாற்றுகிறது - இ.இளந்திரையன்

வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டோம் எனத் தென்பகுதி மக்களிடம் கூறி அவர்களை முட்டாளாக்கும் அரசியல் நோக்கத்துக்காகவே சிலாவத்துறையை அரசாங்கம் கைப்பற்றியதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார்.


மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடங்களே தற்பொழுது இராணுவத்தினரால் மீட்கப்பட்டிருப்பதாகவும், மனிதநேயப் பணிகளைத் தவிர ஆயுதம் தாங்கிய போராளிகள் அங்கு இருக்கவில்லையெனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

முக்கியமான விடயங்களைக் கருத்தில்கொள்ளாமல் அரசாங்கம் வெறுமனே கருத்துக்களைக் கூறுகிறது. இது எப்பவும் எமது முக்கிய இடமாக இருந்தது இல்லை. வெறும் கண்துடைப்பே என்றார் அவர்.

சிலாவத்துறைப் பகுதியில் மோதல்கள் இடம்பெறவில்லை. அது விடுதலைப் புலிகளின் மனிதநேயப் பணிகள் முன்னெடுக்கப்படும் இடம். இது அரசாங்கத்தின் அரசியல் சதி என இளந்திரையன் அந்த ஊடகத்திடம் கூறியுள்ளார். மதவாச்சி-மன்னார் வீதியின் தென்பகுதியில் சிலாவத்துறை காணப்படுகிறது.

இது அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசம் என்பதால் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அங்கு இல்லை. அரசியல் ரீதியான இலாபத்தை ஈட்டிக்கொள்வதற்காக அரசாங்கம் பொதுமக்களைப் பிழையாக வழிநடத்துகிறது என்றார் அவர்.

கடந்த காலங்களிலும் வன்னியைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து தோல்வி கண்டமையை நினைவுகூர்ந்திருக்கும் இளந்திரையன், அவர்கள் எம்மீது தாக்குதல் நடத்த பல தடவைகள் முயற்சித்தார்கள் எது பயனளிக்கவில்லை. அரசாங்கம் வில்பத்து, சிங்கராஜ மற்றும் அதனை அண்டிய பகுதிகளைக் கைப்பற்றிவிட்டு அங்கு தேசியக் கொடியை ஏற்றி விடுதலைப் புலிகளின் பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக மக்களை அரசாங்கம் ஏமாற்றப் போகிறது எனக் கூறினார்.

இராணுவத்தினரின் எறிகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்தே உயிலங்குளம் சோதனைச்சாவடியிலிருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் விலகியது என விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரயன் மேலும் தெரிவித்தார்.

நன்றி: தமிழ்வின்
http://www.tamilwin.net/article.php?artiId=4319&catId=&token=dispNews

பாராளுமன்றத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆற்றிய உரை:

கௌரவ சபாநாயகர் அவர்களே!.......

அழகிய எங்கள் தேசம் பாரிய அழிவை எதிர்நோக்கிக்கொண்டிருக்கின்றது.
நடந்து கொண்டிருக்கும் இழப்புகளையும் விட இன்னமும் அதிகமான ஒரு அழிவு நோக்கி எமது மக்களை இழுத்து செல்வதற்கு புலித் தலைமை தயாராகிக்கொண்டிருக்கின்றது.

நடந்து கொண்டிருக்கும் அழிவுகளில் இருந்தும். இனி நடக்கப்போகும் அழிவுகளில் இருந்தும் எமது மக்களையும் எமது தேசத்தையும் காப்பதற்கு ஒரு அபாயத்தின் முன்னறிவிப்பாக நான் மனம் திறந்து பேச விரும்புகின்றேன்.

இன்று எமது மக்களின் முகங்களில் மகிழ்ச்சி இல்லை!... அவர்களது மனங்களில் நிம்மதி இல்லை.... நாளைய பொழுது நல்லதாக விடியும் என்ற நம்பிக்கைகளே அவர்களது எதிர்பார்ப்பு!.... அதுதான் அவர்களது விருப்பம்.....

ஆனாலும், அந்த நம்பிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் வெறும் கனவாகிப்போய்விடுமோ என்ற ஏக்கத்தில் மட்டும்தான் எமது மக்களின் ஒவ்வொரு பொழுதுகளும் விடிந்து கொண்டிருக்கின்றன.
இதற்கு காரணமாக இருப்பது முடிவற்று தொடரும் அழிவு யுத்தம் மட்டும்தான்.
அன்று தமிழ் பேசும் மக்களுக்கான ஆயுதப்போராட்டம் என்பது நீதியின் பக்கம் நின்று வழி நடத்தி செல்லப்பட வேண்டும் என்ற ஒரு வரலாற்று நிர்ப்பந்தம் இருந்தது. அப்போது நாமும் நீதியின் பக்கம் நின்று ஆயுதப்போராட்டத்தை ஆரம்பித்து வழி நடத்தி சென்றவர்கள்.

ஆனாலும் அந்த ஆயுதப்போராட்டம் திசை வழி மாறிச்சென்றது. ஆயுதப்போராட்டம் என்பது செல்ல வேண்டிய பாதையை விட்டு தடம்புரண்டு தவறான பாதைக்கு சென்றது.
எந்த மக்களுக்காக போராடுவதாக புலித் தலைமையினர் கூறினார்களோ அதே சொந்த மக்களையும் அவர்களுக்காக போராடப்புறப்பட்ட போராளிகளையும் கொன்று குவிக்கும் கோடரிக்காம்புகளாக புலித் தலைமை செயற்படத்தொடங்கியது.

புலித்தலைமையின் ஏவலால் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் மீது படுகொலைகளை புரியத் தொடங்கினார்கள் புலிகள். அப்பாவி சிங்கள சகோதர மக்களை தெருவெங்கும் கொன்று போட்டனர் புலிகள்.

ஆயுதப்போராட்டம் என்பது எதை அடையவேண்டும் என்ற ஒரு இலக்கையே கொண்டிருக்க வேண்டும். ஒன்றை பெற்றுக்கொள்வதற்காகவோ அன்றி ஒரு இலக்கை அடைவதற்காகவோ நடக்கின்ற எந்தப்போராட்டத்தையும் யாரும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

சொந்த இனத்தின் குருதியை குடிக்கவும், காலங்காலமாக ஒன்றாக வாழ்ந்திருந்த முஸ்லிம் சகோதர மக்கள் மீது வன்முறைகளை ஏவிவிடவும், அப்பாவி சிங்கள மக்களை கொன்று குவிக்கவுமே ஆயுதப்போராட்டம் புலித்தலைமையால் பயன்படுத்தப்பட்டது.

இழப்புக்களை மட்டும்தான் ஆயுதப்போராட்டம் ஏற்படுத்தியிருந்தது. இழப்புக்கள் இல்லாமல் போராட்டம் இருக்க முடியாது என்று கூறும் புலித்தலைமை இதுவரை கால இழப்புகளில் இருந்து எந்த முன்னேற்றத்தை அடைந்திருக்கின்றார்கள் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

இழப்புக்கள் இல்லாமல் போராட்டம் இல்லை என்று கூறும் புலித்தலைமையை நியாயப்படுத்தும் சுயலாபக்கார பேர்வழிகள்தான் மக்களின் இழப்புகள் குறித்து பேச இங்கு வந்திருக்கின்றார்கள்.
கொல்!.... அல்லது கொல்லப்படு!!... என்ற மக்கள் விரோத கோட்பாட்டை கொண்டிருக்கும் புலித்தலைமையை நியாபடுத்தும் சுயலாபக்கார பேர்வழிகள்தான் கொலைகளைப்பற்றி பேச இங்கு வந்திருக்கிறார்கள்.

நாற்பதினாயிரம் சவப்பெட்டிகளை யாழ்ப்பாணம் அனுப்பவதற்கு தயாராக இருங்கள் என்று பாராளுமன்றத்தில் யுத்த பிரகடனம் செய்து விட்டு, அதனால் விளைந்த அழிவுகளை பற்றி அவர்களே இன்று பேச வந்திருக்கிறார்கள்.விசித்திரமான பேர்வழிகள் இவர்கள். வேடிக்கையான மனிதர்கள் இவர்கள், மக்களின் வேதனைகளுக்கு தாமே காரணமாக இருந்து கொண்டு அவர்களே வேதைனைகள் குறித்தும் மக்கள் சந்தித்து வரும் சோதனைகள் குறித்தும் பேச வந்திருக்கிறார்கள்.

அழிவுகளில் இருந்து மக்களையும் எமது தேசத்தையும் மீட்டெடுத்து அமைதிப்பூங்காவில் உரிமை பெற்ற சுதந்திர பிரஜைகளாக தமிழ் பேசும் மக்கள் வாழவேண்டும் என்ற ஒரு உன்னத நோக்கில் மட்டும்தான் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்பது உருவாக்கப்பட்டது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு முன்னரான ஆயுதப்போராட்டமும் அதற்கு முந்திய அகிம்சை வழிப்போராட்டங்களும் இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற ஒரு பொன்னான வாய்ப்பினை உருவாக்கி தந்திருந்தது.இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்பட்டு இன்று இருபது ஆண்டுகள் கழிந்து விட்டன. அந்த பொன்னான வாய்ப்பினை புலித்தலைமை உடைத்து சிதைத்திருந்தது.

அதே வேளை இலங்கை இந்திய ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கூட அதை சரிவரப் பயன்படுத்தவும் தவறி விட்டனர். அந்த ஒப்பந்தத்தை அவர்கள் துஷ்பிரயோகம் செய்திருந்தனர்.
இலங்கை இந்திய ஒப்பந்தத்தை சரியாக பயன்படுத்த எண்ணிய ஈ.பி.டி.பி யினராகிய எமக்கு அந்த ஒப்பந்த நடைமுறையில் பங்கெடுப்பதற்கான சந்தர்ப்பத்தை அன்று அதை ஏற்றுச்செயற்பட்டிருந்த அமைப்பினர் மறுத்திருந்தனர் என்பதையும் இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

ஏகபிரதிநித்துவம் என்ற புலித் தலைமையின் தலைமை வெறி ஒருபக்கமும், அதே குணாம்சத்தில் பிற தலைமைகளை அங்கீகரிக்க தவறிய தவறான தலமைகள் இன்னொரு பக்கமுமாக நின்று இலங்கை இந்திய ஒப்பந்த நடைமுறைகளை குழி தோண்டி புதைத்திருந்தன.

அது ஒரு பொன்னான வாய்ப்பு! இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உடைத்து சிதைத்து புலிகள் ஏற்படுத்திய நாசகாரச்செயல்களும், அதை சரிவர பயன்படுத்த தவறிய கட்டுப்பாடற்ற தலைமைகளின் தவறான செயற்பாடுகளும் இன்று எமது மக்களாகிய உங்களது கண்களில் இருந்து இரத்த கண்ணீரை வரவழைத்திருக்கின்றன.

இந்த இருபது ஆண்டுகளும் இழப்புக்களோடும் இன்னல்களோடும் மக்களாகிய உங்களது துயரக்கதை தொடர்கின்றது. இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாகும் வரைக்கும் புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்கள் தொகை 652 உறுப்பினர்கள் மட்டும்தான். இதை புலித் தலைமையே அப்போது பகிரங்கமாக அறிவித்திருந்தது.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உடைத்து சிதைத்து நாசமாக்கி அமைதிப்படையோடு அழிவு யுத்தம் தொடங்கிய புலித் தலைமை அதன் பின்னர் இலங்கை அரச படைகளோடும் அழிவு யுத்தத்தை தொடர்ந்திருந்தனர். இப்போது தமது புலிகள் இயக்கத்தில் இருந்து இறந்தவர்கள் தொகை பத்தொன்பதினாயிரத்தை கடந்து விட்டதாக புலித் தலைமை அறிவித்திருக்கின்றது.
அதைவிடவும், புலிகளால் மேற்கொள்ளப்பட்ட உள்ளியக்கப்படுகொலைகளினால் கொல்லப்பட்ட புலி உறுப்பினர்களின் தொகைகள் எத்தனை?... தம்மிடமிருந்து பிரிந்து சென்றவர்கள் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கிழக்கின்; வெருகல் ஆற்றுப்படுகொலையில் கொல்லப்பட்ட உறுப்பினர்களின் தொகைகள் எத்தனை?.... கொழும்பில் நஞ்சூட்டிக்கொல்லப்பட்ட உறுப்பினர்களின் தொகைகள் எத்தனை?... இவைகள் புலிகளின் 19000 என்ற கணக்கில் சேர்க்கப்படவில்லை.

தமிழர்களின் மாற்று அமைப்புக்களின் உறுப்பினர்கள், அரசியல் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், புலிகளின் தவறான பாதைக்கு ஒத்துப்போக மறுத்த பொதுமக்கள், கப்பமும், கட்டாய வரியும் கொடுக்க மறுத்தவர்கள் என பல தரப்பட்டவர்களும் புலித் தலைமையின் குருட்டுத் துப்பாக்கிகளுக்கு பலியாகிப்போயிருக்கின்றார்கள்.

யுத்தத்தில் அநியாயமாக கொல்லப்பட்ட பொதுமக்களின் அழிவுகள் உட்பட கணக்கு பார்த்தால் இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பிந்திய அழிவுகளே பலமடங்கு அதிகமாக இருக்கின்றது.
புலிகளால் நேரடியாக கொல்லப்பட்டாலும் சரி, அல்லது யுத்தத்தில் கொல்லப்பட்டாலும் சரி இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு பின்னரான இன்று வரையான அழிவுகளுக்கான பொறுப்பை புலித் தலைமையே ஏற்கவேண்டும்.

ஏனெனில் அந்த ஓப்பந்தத்தை எதிர்த்து அமைதிப்படையோடு யுத்தம் நடத்தி, அதன் பின்னர் பிறேமதாச அரசுடனும் பேசி, கூடிக்குலாவி பின்னர் யுத்தம் நடத்த தொடங்கி, அதை இன்று வரை தொடர்ந்து எமது மக்களுக்கும் இந்த நாட்டிற்கும் பாரிய அழிவுகளை ஏற்படுத்தியவர்கள் புலித் தலைமையே.

இலங்கை இந்திய ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு 13 வருடங்கள் கழிந்த நிலையில் அதாவது 2000 ஆம் ஆண்டு புலித்தலமையின் அரசியல் ஆலோசகராக இருந்த அன்ரன் பாலசிங்கம் அவர்கள் பகிரங்கமாக மக்களுக்கு என்று கூறி ஆற்றியை உரையின் கருத்துக்களையும் நான் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் நல்ல பல சாதகமான அம்சங்கள் இருந்தன என்ற உண்மையை அன்னரன் பாலசிங்கம் அவர்கள் குறிப்பிட்டு பேசியிருந்தார். சாத்தான் வேதம் ஓதியது போல், இலங்கை இந்திய ஒப்பந்தத்தை உடைத்து சிதைத்திருந்த புலிகளின் ஆலோசகரே பின்பு அதை ஆதரித்தும் கருத்து கூறியிருந்தார். கண்கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் தேவையில்லை!

இன்னொரு புறத்தில், இலங்கை இந்திய ஒப்பந்த காலத்தில் இந்திய விஸ்தரிப்பு வாதம் என்றும் ஆக்கிரமிப்பு என்றும், எமது நேச நாடாகிய இந்தியாவுடன் பகமையை தோற்றுவிப்பதற்கான பிரச்சாரங்களில் ஈடுபட முனைந்தவர்கள்தான் இன்று இலங்கை இந்திய ஒப்பந்தம் குறித்து அறிக்கைகளில் மட்டும் அழுது வடிக்கின்றார்கள்.

ஒரு பொறுப்புள்ள அரசியல் கடமையோடு அன்றைய சமகாலத்தை உணர்ந்து, எதிர்காலத்தின் விளைவுகளையும் உணர்ந்து, அரசியல் ஜதார்த்த நிலமைகளை கருத்தில் கொண்டு இது போன்ற இலங்கை இந்திய ஒப்பந்தத்திற்கு எதிரான பிரச்சாரங்களை நான் கருத்துக்களால் மட்டும் தடுத்து நிறுத்தியும் இருக்கின்றேன் என்ற விடயத்தையும் இங்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.

இலங்கை இந்திய ஒப்பந்தம் என்ற பொன்னான வாய்ப்பை தவற விட்டவர்கள் கடந்து போன பஸ்வண்டிக்கு கை காட்டிக்கொண்டிருக்கின்றார்கள். சந்தர்ப்பங்களை சரிவரப்பயன்படுத்த தவறிய தமிழ் தலைமைகளால் இன்று எமது மக்கள் யுத்தம் என்ற இருட்டறைக்குள் சிறைப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

இலங்கை இந்திய ஒப்பந்தம், அதற்கு பிந்திய ராஜீவ் காந்தியுடனான புலித் தலைமையின் இரகசியப்பேச்சு வார்த்தை, பிறேமதாசா - புலிகள் பேச்சு வார்த்தை, சந்திரிகா குமாரணதுங்க - புலிகள் பேச்சு வார்த்தை, ரணில் விக்கரமசிங்க - புலிகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் என அனைத்து சந்தர்ப்பங்களையும் தங்களது சுயலாப வன்முறை அரசிலுக்கு மட்டும்தான் புலித்தலமை பயன்படுத்திக்கொண்டது.

கௌரவ ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்கள் ஆட்சிக்கு வந்திருந்த போது தான் பிரபாகரனுடன் நேரடியாக பேச்சு வார்த்தையில் ஈடுபடப்போவதாக தனது சமாதானத்தின் மீதான விருப்பத்தை பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார். ஆனாலும் அந்த சமாதான விருப்பங்களை ஏற்றுக்கொள்ள மறுத்த புலித் தலைமை பொங்கி எழும் மக்கள் படை என்றும், சீறும் படை என்றும், சங்கிலியன் படை என்றும் பல அனாமதேய அமைப்புகளின் பெயரால் அரச படையினர் மீதான தாக்குதல்களை நடத்த தொடங்கியிருந்தனர்.

பல நூறு மாற்று கருத்து கொண்ட தமிழ் ஐனநாயக சக்திகள் மீதும், ஒத்துப்போக மறுத்த தமிழ் பொதுமக்கள் மீதும் இதே அனாமதேய அமைப்புகளின் பெயரால் படுகொலைகளையும் புரிந்திருந்தனர் புலித்தலைமை.

2005 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி கௌரவ ஐனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் இந்த நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றிருந்தார். பதவிக்கு வந்ததும் தனது சமாதானத்திற்கான நல்லெண்ண சமிக்ஞையை காட்டியிருந்தார் தான் புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் நேரடியாக பேச விரும்புவதாகவும் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார்.

அதற்கு அடுத்த வாரம் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது வருடாந்த நவம்பர் மாத உரையை நிகழ்த்தியிருந்தார். பிரபாகரன் தனது உரையில் தனது வழமையான யுத்த பிரகடனத்தையே வெளிப்படுத்தியிருந்தார். தவிர்க்கமுடியாத வரலாற்றுச் சூழ்நிலைகள் காரணமாகச் சிங்கள அரசுடன் சமாதானப் பேச்சுக்களில் பங்குபற்ற தாம் நிர்ப்பந்திக்கப்பட்டதாக தனது உரையில் தெரிவித்திருந்த பிரபாகரன் தனது இலக்கை எட்டுவதற்கான யுத்த எண்ணங்களுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே தாம் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்தாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த ஆபத்தான சூழலை கருத்தில் கொண்டு ஈ.பி.டி.பி யினராகிய நாம் தமிழ் பேசும் மக்களையும் இந்த நாட்டில் இருக்கும் அனைத்து இன மக்களையும் அழிவுகளில் இருந்து காப்பாற்றுமாறு கோரி சர்வதேச சமூகத்திடம் ஒரு மனிதாபிமான வேண்டு கோளை 06. 12. 2005 இல் விடுத்திருந்தோம்.

அந்த அறிக்கையின் சில பகுதிகளை இந்த சபையில் நான் எடுத்து கூற விரும்புகின்றேன்.
வடக்கு கிழக்கில் படையினரை தூண்டிவிடும் வகையில் புலிகளால் பரந்த அளவிலான இராணுவ முன்னெடுப்பும் தாக்குதல்களும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன!

இதுவரை கால புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முதன் முதலாக படையினர் மீது யாழ் கோண்டாவில் பகுதியில் வைத்து கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டு ஆறு படையினர் கொல்லப்பட்டு இருவர் படுகாயம் அடைந்தனர். பின்னர் காயமடைந்த ஒருவரும் காலமானார்.

அதேபோல் முதன் முதலாக யாழ் நீர் வேலிப்பகுதியில் புரிந்துணர்வு ஒப்பந்த காலத்தில் இதுவரை நடத்திருக்காத பரந்த அளவில் நேரடி தாக்குதலிலும் புலிகள் ஈடுபட்டு இரு படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 2005 டிசம்பர் மாதம் 6ம் திகதி புலிகளால் இருபாலையில் மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் 5 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.

அதே வேளை கிழக்கில் காத்தான்குடி பிரதேச செயலாளர் ஏ.எல். எம். பளீல் அவர்களை படுகொலை செய்ததன் மூலம் தமிழ் முஸ்லிம் இனங்களுக்கிடையிலான மோதலையும் முரண்பாடுகளையும் புலிகள் தூண்டிவிட்டிருக்கின்றார்கள்! அதேபோல் 2005 நவம்பர் 18ம் திகதி அதிகாலை அக்கரைப்பற்று முஸ்ஸிம் பள்ளிவாசலினுள் புலிகள் கைக்குண்டு தாக்குதலை மேற்கொண்டு 6 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதுடன் 13 பேர் படுகாயம் அடைந்தனர். 2005 நவம்பர் 19ம் திகதி ஏறாவூர் பகுதியில் வைத்து 4 முஸ்லிம்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 2005 டிசம்பர் 06ம் திகதி புலிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ள மருதமுனை பகுதி வாசிகளான இரு முஸ்லிம்களை சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

மாணவர்களின் பெயரால் மாணவர்களின் சீருடைகளை அணிந்த புலிகளின் சிறுவர் படையணியினர் படையினரின் சோதனைச்சாவடிகளுக்கு கல் எறிந்து தாக்குவதால் மாணவர்களின் கல்வி மற்றும் இயல்பு வாழ்க்கை என்பனவும் இன்னமும் பல் மடங்கு பாதிக்கப்படும் அபாயம் தோன்றியுள்ளது.

மக்களின் குடியிருப்புக்களில் இருந்து புலிகள் தாக்குதல் நடத்துவதால் அப்பாவி மக்களே பாதிப்படைகின்றார்கள். அப்பாவி மக்களுக்கு அவலங்கள் நிகழ வேண்டும் என நினைத்து புலித் தலைமை திட்டமிட்டு நடத்தும் தாக்குதல்கள் இவையாகும்.

புலித் தலைமை முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கைகளால் சமாதானத்தை விரும்பும் மக்கள் மிகவும் அச்சத்திற்கு உள்ளாகியிருக்கின்றனர். இதேவேளை யுத்த எண்ணங்களை தூண்டிவிடும் வகையிலான பிரச்சாரங்களை புலிகளின் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் இறுதி யுத்தத்திற்கான நிதி சேகரிப்பு என்று பாரிய அளவில் உளவியல் அச்சுறுத்தலை விடுத்து பலாத்காரமாக நிதி சேகரிக்கும் காரியத்திலும் புலிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர். அதேவேளை கோண்டாவில் பகுதியில் புலிகள் நடாத்திய கிளைமோர் தாக்குதல் சம்பவத்தை வீடியோ படம் பிடித்து வெளிநாடுகளில் காட்டியும் நிதிதிரட்டியும் வருகின்றனர்.

ஆகவே இது குறித்து சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கைகளை எடுத்து விரைந்து பணியாற்ற வேண்டும்! யுத்தத்தை தொடராதிருக்கவும், சமாதானப்பேச்சுக்களை ஆரம்பிக்கவும் ஆவன செய்து அதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்!
தமிழ் பேசும் மக்களின் சமாதானம் குறித்த நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்புகளையும் சர்வதேச சமூகத்தின் கைகளில் நாம் ஒப்படைக்கின்றோம்! சமாதானத்தை உருவாக்கவும் தமிழ் பேசும் மக்களை காப்பாற்றவும் விரைந்து செயலாற்ற முன்வரவேண்டும் என ஈ.பி.டி.பி கோரிக்கை விடுக்கின்றது. இவ்வாறு ஈ.பி.டி.பி யினராகிய நாம் சர்வதேச சமூகத்திடம் 06. 12. 2005 இல் மனிதாபிமான வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே!...
அன்று புலிகள் யுத்த முனைப்புகளில் ஆர்வம் காட்டி படையினர் மீதான தாக்குதலை ஆரம்பித்திருந்த போது வரப்போகும் அழிவுகளை கருத்தில் எடுக்காமல் புலிகளின் தயவில் இருக்கும் சுயலாபகார பேர்வழிகள் வாய் பொத்தி மௌனிகளாக இருந்திருந்தனர். ஆனால் இன்று அதே சுயலாபகார பேர்வழிகள் அவர்கள் தமிழ் பேசும் மக்களின் அழிவுகள் குறித்து நாடாளுமன்னத்தில் விவாதம் நடத்த வந்திருக்கின்றார்கள்.

புலிகளும் அவர்களது தயவில் கூட்டமைப்பு என்ற பெயரில் இருக்கும் பொறுப்பற்ற சுயலாபக்கார அரசியல் பேர்வழிகளும் நேற்றைய தவறுகளால் இன்று அழுவது போல் நடிக்கின்றார்கள், இன்றைய தவறுகளால் நாளையும் அழுவது போல் நடிப்பார்கள். ஆனால் நடந்த தவறுகளுக்கு யார் காரணம் என்பதை மட்டும் தெரிந்து கொண்டும் தெரியாதவர்கள் போல் நடிக்கின்றார்கள்.

இன்று இருக்கின்ற சந்தர்ப்பங்கள் கூட சரிவரப்பயன்படுத்தபடுவதற்கான எந்த அறிகுறிகளும் இல்லை. சாமாதானமும், அமைதியும், அரசியலுரிமை சுதந்திரமும் மக்களாகிய உங்களது கைகளுக்கு எட்டாத தூரத்திற்கு தள்ளப்பட்டு வருகின்றன. யுத்தம் மட்டும்தான் கிட்ட வந்து எமது தேசத்தின் ஒவ்வொரு குடிமகனதும் வாசல் கதவுகளை கோர முகத்துடன் தட்டிக் கொண்டு இருக்கின்றது.

தமது யுத்த வெறியினால் சமாதானத்திற்கான சந்தர்ப்பங்களை உதறித் தள்ளிவிட்ட புலித் தலைமை எமது தாயக பூமியான கிழக்கு மண்ணை இழந்து நிற்கிறது. இருந்ததையும் இழந்து நிற்கும் புலித்தலமை இருப்பதையும் இழப்பதற்கான வழமையான கைங்கரியத்தில் இப்போது இறங்கி நிற்கிறது.

வன்னி பெருநிலப்பரப்பை தமது அதிகாரப்பிடிக்குள் வைத்திருக்கும் புலித்தலைமை அங்குள்ள இளம் சிறார்களை பலாத்காரமாக தமது படையணிக்கு சேர்த்து வருகின்றார்கள். பெற்றார் முன்னிலையில் பிள்ளைகள் ஆயுதப்பயிற்சிக்காக கதறக்கதற கடத்திச்செல்லப்படுகின்றார்கள்.
வெள்ளை வான்களில் வீடுகள் தோறும் வந்திறங்கும் புலிகள் வன்னி வாழும் மக்களின் பிள்ளைகளை அவர்களது விருப்பங்களுக்கு மாறாக பிடித்துச்செல்கின்றார்கள்.

இவ்வாறு பிடித்துச்செல்லப்படும் எமது தமிழ் இளவயதினர்கள் கட்டாய ஆயுதப்பயிற்சியில் ஈடு படுத்தப்படுகின்றார்கள். அநியாயமாக குருதி சிந்தும் கள முனைக்கு அனுப்பப்படுகின்றார்கள்.
யுத்த முனைக்கு செல்ல விரும்பாத எம் தமிழ் இளையோர்களை துப்பாக்கி குழாய்களை அவர்களது முதுகுகளுக்கு பின்னால் நீட்டியபடி இராணுவ காவலரன்களை நோக்கி நிற்கும்படி மிரட்டுகின்றார்கள்.

குறிப்பட்ட தமது பிரதேசங்களுக்குள் மட்டும் நடமாட வேண்டும் என்ற கட்டளை பிறப்பித்து அதெற்கென விஷேட அடையாள அடடையினையும் புலிகள் தங்களது கட்டுப்பாட்டு பிரதேசமான வன்னியில் அதிகாரம் செலுத்தி மக்களை அடக்கியும் வருகின்றார்கள். சுதந்தரமாக நடமாட முடியாது, சுதந்திரமாக தொழில் புரிய முடியாது, சுதந்தரமாக எழுத முடியாது, பேச முடியாது, விரும்பியபடி பொது மக்கள் வன்னியை விட்டு வெளியேறிச்செல்ல முடியாது.

சிறார்கள் முதற்கொண்டு முதியோர்கள் வரை கர்ப்பிணி பெண்கள் என அனைவரும் கட்டாய ஆயுதப்பயிற்சியில் ஈடுபட நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கின்றார்கள். இது குறித்து புலிகளின் தயவில் தமிழரின் பெயரால் வாக்கு மோசடியில் ஈடுபட்டு திருட்டத்தனமாக நாடாளுமன்றம் வந்திருப்பவர்கள் வாயே திறப்பதில்லை.

கடந்த 11. 08. 2006 அன்று யாழ் மண்ணை நான்கு நாட்களில் கைப்பற்றப்போவதாக கூறி புலிகள் நடத்திய யாழ் மீதான தாக்குதல் முயற்சி பெரும் இழப்புகளோடு தோல்வியில் முடிந்திருந்ததை அனைவரும் அறிவீர்கள். இதனால் யாருக்கு இழப்பு?... யாருக்கு அவலம்?... இதை புலிகளின் தயவில் அரசியல் நடத்தும் பேர்வழிகள் புரிந்து கொண்டும் மக்களின் அவலங்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடித்து வந்து நிற்கிறார்கள்.

மக்களின் அவலங்கள் குறித்தும், அழிவுகள் குறித்தும் நீலிக்கண்ணீர் வடிக்கும் பேர்வழிகள் அந்த அவலங்களுக்கு புலிகள்தான் பிரதான காரணமாக இருக்கின்றார்கள் என்ற உண்மைய எடுத்து கூற வக்கற்றவர்களாக இருக்கின்றார்கள்.

நேற்றைய தினம் இவர்களில் சிலர்கூட இந்த சபையில் மக்களின் அவலங்கள் குறித்து பேசியிருந்தார்கள். "இடிப்பது சிவன் கோயில், படிப்பது தேவாரம்" என்பது போல் அவலங்களுக்கு தாமும் காரணமாக இருந்து கொண்டு அவலங்களுக்காக அழுவது போல் நடித்திருந்தார்கள்.

யார் இவர்கள்?..... மக்களின் சொத்துக்களை மக்கள் பிரதிநிதிகள் என்ற பெயரில் இருந்து கொண்டு சூறையாடிக்கொண்டிருக்கும் ஊழல் பேர்வழிகள் இவர்கள், மக்களுக்கு கிடைக்க வேண்டிய வருமானத்தையும், தொழிலாளர்களின் உழைப்பையும் திருட்டுத்தனமாக சுரண்டும் சுரண்டல் பேர்வழிகள் இவர்கள். திருகுதாளமிட்டு திருட்டு வாக்குப்போட்டு மக்களின் வாக்குரிமையை தட்டிப்பறித்து தமக்கு தாமே வாக்குப்போட்டு நாடாளுமன்றத்திற்கு வந்திருப்பவர்கள் இவர்கள். வேறுசிலர் யுத்த நெருக்கடி நிலைமைகளை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு. கொள்ளை லாபம் அடிப்பதில் ஈடுபடுகின்றனர்.

மக்களின் அவலங்கள் குறித்து பேசும் தகுதியை இழந்திருப்பவர்கள் இவர்கள் என்று மக்களே எம்மிடம் வந்து முறையிட்டிருக்கின்றார்கள். புலித் தலைமையின் யுத்த வெறிக்கு தமது சுயலாபத்திற்காக தாளம் போடும் தலையாட்டி பொம்மைகள் இவர்கள்.

யாழ் குடாநாட்டை கைப்பற்ற நினைத்து புலித் தலைமை மேற்கொண்ட யுத்த வெறியினால் முகமாலையிலும் அல்லைப்பிட்டியிலும் எமது தமிழ் இளவயதினரை யுத்தத்திற்கு பலி கொடுத்து விட்டு திரும்பி ஓடியதுதான் கண்ட மிச்சம்.

இப்போது யாழ் மீது படையெடுக்க புலித்தலைமை மறுபடியும் திட்டமிட்டு வருகின்றது. அதற்காக அறுபதினாயிரம் தமிழ் இளவயதினரை கட்டாயத்தின் பேரில் பிடித்துச்சென்று அவர்களுக்கு ஆயுதப்பயிற்சியும் அளித்து வருகின்றது புலித் தலைமை.

யாழ் மண்ணையும் தங்களது சர்வாதிகார ஆதிக்க பிடிக்குள் கொண்டு வர நினைக்கும் புலித் தலைமை யாழ் மண்ணிலும் தங்களது சட்ட விரோத சர்வாதிகார ஆட்சியை நிலை நிறுத்துவதற்கு திட்டமிட்டு வருகின்றது. இந்தத் தாக்குதல் நடவடிக்கையின் போது, யாழ் மண்ணில் இன்னும் ஐம்பதினாயிரம் இள வயதினரை கட்டாயத்தின் பேரில் தங்களது படையணியில் சேர்க்கும் திட்டத்தை புலித் தலைமை தீட்டி வருகின்றது.

மண் மீட்பு என்ற சுயலாப கற்பனைத்தேரில் பவனி வரும் புலித் தலைமை தாம் மீட்கப்போவதாக கூறும் மண்ணுக்காக அப்பாவி மக்களை பலி கொடுக்க தயாராகி வருகின்றது. யாழ் மண்ணை கைப்பற்ற நினைக்கும் புலித்தலைமை இளவயதினரையும், அப்பாவி மக்களின் உயிர்களையும் பலி கொடுக்க தயாராகி வருகின்றது.

ஓரடி முன்னால் ஈரடி பின்னால் என்ற வகையில், சாண் ஏற முழம் சறுக்குவது என்ற நிலையில் நிலங்களை கைப்பற்றுவதும், பின் அதை கைவிட்டு ஓடுவதுமாக புலித் தலைமையின் வரலாறு தொடந்தபடி இருக்கின்றது.

இந்நிலையானது தமிழ் பேசும் மக்களின் சமாதான சகவாழ்வு என்ற இலக்கு நோக்கிய பயணத்தை பின்னோக்கி இழுத்து வருகின்றது. மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி என்ற தமிழ் பேசும் மக்களின் அரசியல் இலக்கை அடைவதற்கான பாதையில் தடைகளை உருவாக்கி வருகின்றது.

இன்றைய காலச்சூழலில் யுத்தத்தால் எந்த பிரச்சினைக்கும் தீர்வு கண்டு விட முடியாது. யுத்தம் அழிவுகளை மட்டும்தான் உருவாக்கும். யுத்தம் இளவயதிரை பலாத்காரமாக தங்களது படையணிகளுக்கு கடத்திச்செல்லவே வழி வகுக்கும். அப்பாவி மக்களை சுயலாப அரசியலுக்கு பலி கொடுக்கவே பயன்படும்.

பட்டுவேட்டி பற்றிய கனவில் இருந்தால் கட்டியுள்ள கோவணமும் களவாடப்பட்டு விடும் என்ற முதுமொழியைப்போல் யுத்தத்தின் மூலம் எதையும் சாதித்து விடலாம் என்ற புலித் தலைமையின் அழிவு நோக்கிய திட்டங்கள் இருக்கின்ற நிலமைகளையும் மோசமான ஒரு நிலைக்கே இழுத்துச்செல்லும். எமது மக்களுக்கும், இந்த நாட்டில் வாழும் சகல இன மக்களுக்கும் அழிவுகள் வந்து விடக்கூடாது என்ற விருப்பத்தில் இருந்துதான் நான் இதை தெரிவிக்க விரும்புகிறேன்.

புலித் தலைமையின் யுத்தவெறி ஒரு போதும் நிரந்தர வெற்றியை அவர்களுக்கு பெற்றுக் கொடுக்கப் போவதில்லை. அப்பாவி மனித உயிர்களை யுத்தத்திற்கு தின்ன கொடுத்து அவர்கள் முன்னெடுகப்போகும் நாசகார நடவடிக்கை என்பது இன்னும் இலட்சக் கணக்கான மக்களை நடுத்தெருவிற்கு கொண்டு வந்து நிறுத்தப் போகின்றது. மனிதப்பிணங்களை தெருக்கள் எங்கும் வீசியெறியப் போகின்றது.

மண்ணை கைப்பற்றுவதும், அதன் பின்னர் கைப்பறிய மண்ணை கைவிட்டு தப்பி ஓடுவதுமாகவே புலித் தலைமையின் இது வரை கால நாசகார வரலாறுகள் தொடர்ந்து வந்திருக்கின்றது. புலித் தலைமை மண்ணை கைப்பற்றும் போதும் மக்களுக்கு இழப்பு வருகின்றது. அதன் பின்னர் மண்ணை கைவிட்டு ஓடும் பொழுதும் மக்களுக்கு மட்டும்தான் இழப்பு வருகின்றது.

பல்குழல் பீரங்கிகள் மோதிக்கொள்வதால் ஏற்படப்போகும் அழிவுகளை பல் குரல்களாலும் தடுத்து நிறுத்த முடியும். யுத்தத்திற்கு எதிராக அனைத்து சமாதான விரும்பிகளும், தமிழ் பேசும் மக்கள் மட்டுமல்ல அனைத்து இன மக்களும் தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டிய தருணம் இது!

புலிகளின் யுத்த வெறி மீது தாம் கொண்டிருக்கும் வெறுப்பை மௌனத்தில் புதைத்து வைத்துக் கொண்டு தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்கள் இருப்பார்களேயானால் வரப்போகும் அழிவுகளை யாராலும் தடுக்க முடியாமல் போய்விடும். யுத்தத்தை தடுத்து நிறுத்தவும், யுத்தம் தரப்போகும் அழிவுகளில் இருந்து மக்களையும் இந்த நாட்டையும் காப்பாற்றிக்கொள்ளவும் அனைத்து சமாதான விரும்பிகளும் முன்வர வேண்டும்.

இது தமிழ் பேசும் மக்களின் பெயரால் நடத்தப்படுகின்ற யுத்தம். தமிழ் பேசும் மக்களின் விடுதலைக்காக என்று கூறி தங்களது பிள்ளைகளை பதுக்கி பாதுகாத்து வைத்துக்கொண்டு அடுத்தவர்களின் பிள்ளைகளை மட்டும் பலிக் களத்திற்கு தின்னக்கொடுக்கும் புலி யுத்தம்.

ஆகவே யுத்தம் வேண்டாம் என்று வெளிப்படையாக வாய்திறந்து பேசுவதற்கு தமிழ் பேசும் மக்களுக்கு உரிமை உண்டு! இந்த அழிவு யுத்தத்தை யாரும் அங்கீகரிக்க முடியாது. இது நீதியான யுத்தமல்ல. அநீதியான யுத்தம். இந்த யுத்தத்தின் மூலம் புலித் தலைமையால் எதையும் சாதித்து விட முடியாது.

தமிழ் பேசும் மக்களுக்கு அரசியலுரிமை சுதந்திரம் வேண்டும். அமைதி வேண்டும், சமாதானம் வேண்டும். ஆனால் இவைகளை இந்த யுத்தத்தின் மூலம் அடைய முடியாது என்ற உண்மையை அனைவரும் வெளிப்படையாக தெரிவிக்க முன்வரவேண்டும்.

புலித் தலைமை முன்னெடுக்கும் நாசகாரச்செயல்களில் இருந்து தொடர்ந்தும் தமிழ் பேசும் மக்கள் விலகியிருக்க வேண்டும். புலித் தலைமையின் வன்முறை நடவடிக்கைகளை தொடர்ந்தும் ஆதரிக்காமல் இருக்க வேண்டும்.

இரத்தம் சிந்தாமல், யுத்தம் நடத்தாமல் எமது பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்கான திட்டங்கள் இருக்கின்றன. அதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கின்றன. அதற்கான நடைமுறைகள் இருக்கின்றன. யாராலும் வெல்லப்பட முடியாத நம்பிக்கையும் துணிச்சலும் எங்களிடம் இருக்கின்றன. நடை முறைச்சாத்தியமான வழிமுறையில் நின்று எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வை எட்டிவிட வேண்டும்.

இன்று அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் யாவும் சுயலாப அரசியல் என்ற சாக்கடை சகதிக்குள் புதைந்து போயிருக்கின்றன. அந்த சகதிக்குள் இருந்து அரசியல் தீர்வு நோக்கிய வண்டியை இழுத்து செல்ல வேண்டும்.

அதை எங்கிருந்து தொடங்குவது என்பது குறித்து ஈ.பி.டி.பி யினராகிய நாம் சர்வகட்சி மாநாட்டிலும், அனைத்து கட்சி தலைவர்களின் சந்திப்புகளிலும், ஐனாதிபதி மகிந்த ராஐபக்ச அவர்களிடமும், எமது அயலுலக நட்பு நாடாகிய இந்தியாவிடமும், சர்வ தேச நாடுகளிடமும் தெளிவாக எடுத்து கூறியிருக்கின்றோம்.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையிலான மாகாண சபைகள் இன்னமும் தென்னிலங்கையில் அரசியல் தலமைகளினால் வழி நடத்திச்செல்லப்பட்டு வருகின்றன. இன்னமும் நடை முறையில் இருந்து வருகின்றன.

ஆனால் வடக்கு கிழக்கில் மட்டும் அதற்கான அரசியல் தலமை கொடுக்கப்படாமல் செயலிழந்து போயிருக்கின்றது. பொறுப்பற்ற தமிழ் அரசியல் தலைமைகளாலும் தமிழ் பேசும் மக்களின் பெயரால் வன்முறை நடத்தும் யுத்த வெறியர்களாலும் வடக்கு கிழக்கு மாகாண சபை என்பது செயலிழக்கப்பட்டு விட்டது.

மாகாண சபை திட்டம் என்பது இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்களுக்காகவே உருவாக்கபட்ட ஒன்று. ஆனால் அந்த வாய்ப்பினை தமிழ் பேசும் மக்கள் மட்டும் அனுபவிக்க முடியாமல் இருக்கின்றார்கள்.

ஆகவே வடக்கு கிழக்கு மாகாண சபைக்கான ஒரு அரசியல் தலமைத்துவத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் சகதிக்குள் புதைந்திருக்கும் அரசியல் தீர்வு முயற்சிகளை முன்னோக்கி நகர்த்த முடியும்! அடுத்த கட்டத்தை நோக்கி அரசியல் தீர்வு முயற்சிகளை நகர்த்திச்செல்ல முடியும். மக்களின் அன்றாட அவலங்களுக்கு முதலில் தீர்வு காண முடியும்

இரண்டாவது கட்டமாக, இன்று நடை முறையில் இருக்கும் அரசியல் யாப்பின் பிரகாரம் கூடிய அதிகாரங்களையும் மாகாண சபைகளுக்கு கொடுத்து மாகாண சபை அதிகாரத்தை பலப்படுத்துவது. அதாவது இணைப்பு பட்டியலை மாகாணசபையுடன் சேர்த்து விடுவது.

இந்த இரு கட்ட நடவடிக்கைகளும் இலங்கையில் இருக்கும் பெரும்பாலும் அனைத்து கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட முடிந்த ஒன்றாகும். அதற்கான இணக்கங்களை பெரும்பாலான அசியல் கட்சிகள் யாவும் தெரிவித்திருப்பது குறித்து நான் தமிழ் பேசும் மக்களின் சார்பில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.

இந்த இரு கட்ட நகர்வுகளும் அனைத்து இன மக்களுக்கும் சமாதானம் குறித்த ஒரு நம்பிக்கையான சூழலை தோற்றுவிப்பதற்கு அடிப்டையாக அமையும்.

அடுத்த கட்டமாக, அரசியலுரிமை தீர்விற்கான இறுதிக்கட்டமாக அனைத்துக்கட்சிகளையும் உள்ளடக்கிய சர்வகட்சி மாநாட்டின் மூலம் இறுதித்தீர்வினை இலகுவாக எட்டி விட முடியும்.
தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் என அனைத்து இன மக்களும் சம உரிமைகளோடு சம பிரஜைகளாக, சமாதான சகவாழ்வு வாழும் காலத்தை உருவாக்க முடியும்!...அதற்கான முன்னெடுப்புகளை தொடர முடியும்!....

சர்வ கட்சிகளும் கலந்து கொள்ளும் இறுதித் தீர்விற்கான மூன்றாவது கட்ட முயற்சியின் போது இதய சுத்தியோடு வன்முறை அரசியலை கைவிடும் பட்சத்தில் புலிகளும் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இது தான் ஈ.பி.டி.பி கொண்டிருக்கும் நடை முறைச்சாத்தியமான அணுகு முறை. இதை நடை முறைப்படுத்துவதற்கான அங்கீகாரத்தையும் ஆதரவையும் சமாதானத்தையும் சகவாழ்வையும் இன ஐக்கியத்தையும் விரும்பும் அனைத்து தரப்பிடமிருந்தும் நாம் எதிர்பார்க்கின்றோம்.

மக்களின் அவலங்கள் குறித்து அக்கறை கொள்ளாமல், அக்கறைபோல் நடித்து கொண்டு, மக்களிடம் வந்து மோசடித்தேர்தல் நடத்தி வாக்கெடுத்து போனவர்கள் மக்களுக்காக எதையும் சாதிக்கப்போவதில்லை. தமிழ் பேசும் மக்களை வாழ வைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் இவர்களிடம் எந்த திட்டங்களும் இல்லை என்பதை நான் இந்த சபையின் ஊடாக தமிழ் பேசும் மக்களுக்கு தெரிவிக்க விரும்புகின்றேன்.

மக்களின் அவலங்களுக்கும் அழிவுகளுக்கும் தாமும் காரணமாக இருந்து விட்டு, அதற்கு காரணமான புலிகளை தோள்களில் தூக்கி வைத்து கூத்தாடிக்கொண்டு மக்களின் அவலங்கள் குறித்து பேச விளையும் போலி அரசியல் தலைமைகள் குறித்து தமிழ் பேசும் மக்களும் சமாதான விரும்பிகளும் விழிப்படையத்தொடங்கிவிட்டார்கள்.

எமது மக்களை வாழ வைப்பதற்கும், அவர்களுக்கு வழிகாட்டுவதற்கும் ஈ.பி.டி.பி யினராகிய நாங்கள் கடினமான உழைத்து வருகின்றோம். வெளிப்படையாக மக்கள் முன்வந்து அழிவு யுத்தத்திற்கு எதிரான தங்களது கருத்துக்களை சகல வழிகளிலும் வெளிப்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகளுக்கும் தங்களது சமாதானத்தின் மீதான விருப்பையும், யுத்தத்தின் மீதான வெறுப்பையும் அவர்கள் வெளிப்படுத்த முன்வர வேண்டும்.

அரசியலுரிமைக்கும், அமைதிக்கும் சமாதானத்திற்கும் தடையாக இருப்பது புலித் தலைமையின் யுத்தவெறிதான் பிரதான காரணம் என்பதை வெளிப்படுத்தும் போது அரசியலுரிமை சுதந்திரத்தை நோக்கிய எங்களது பயணத்தின் தடைகள் அகற்றப்பட்டு விடும்.

அதன் பின்னரும் தடைகள் இருக்குமாயின் வன்முறைகளற்ற வழிமுறையோடு உரிமைக்கு குரல் கொடுத்து உறவுக்கு கரம் கொடுத்து சுலபமாகவே அந்த தடைகளை நீக்கி விடலாம்.

அழகிய எங்கள் தாயக தேசத்தில் மக்களின் முகங்கள் மலர்ந்து சிரிக்க, மரணங்கள் இல்லாத ஒரு அமைதிப் பூங்காவில் அனைத்து இன மக்களும் சம உரிமை பெற்ற சுதந்தர பிரஜைகளாக முகமுயர்த்தி வாழும் பொற்காலத்தை உருவாக்கலாம்.

அழிவு யுத்தத்தை தடுத்து நிறுத்துவோம்!
இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தை பாது காப்போம்!
அரயசிலுரிமை சுதந்திரம் நோக்கி நடை முறைச்சாத்தியமான வழி முறையில் முன்னேறுவோம்!

இன்றே எழுந்திடுங்கள்! நாளை இதை விடவும் தடைகள் அதிகமாகலாம்!!

மத்தியில் கூட்டாட்சி!... மாநிலத்தில் சுயாட்சி!!
தேசத்திற்காக தியாகங்களை ஏற்போம்!
என்றும் நாம் மக்களுக்காக!.....

05.09.2007.

Saturday, September 1, 2007

மன்னார் கிளைமோர் தாக்குதலில் பத்து பொதுமக்கள் பலி!





தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியான மன்னார், பாசித்தென்றல் பிரதேசத்தில் நேற்று காலை 8.15 மணியளவில் பொதுமக்களின் பாவனைக்குரிய வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் சம்பவத்தில் 10 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் மன்னார் வைத்தியசாலையிலும் நால்வர் முருங்கன் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

கொல்லப்பட்டோரில் சிலரின் விபரம்:


1. திருமதி ஜேன்ஸ் - வயது 32
2. ஒஸ்கார் - வயது 22 (திருமதி ஜேன்சின் மைத்துனர்)
3. செல்குமார் (வாகனச் சாரதி)
4. திருமதி செல்வகுமார் - வயது 32
5. செல்வகுமாரின் மகன் - வயது 5
6. செல்வகுமாரின் மாமியார் - வயது 55
7. சுபாஸ்கரன்

Thursday, August 30, 2007

மட்டக்களப்பில் ஈபிடிபி உறுப்பினர்கள் இருவர் சுட்டுக்கொலை.

மட்டக்களப்பிலுள்ள ஐயங்கேணி கிராமத்தில் வைத்து இன்று காலை 11.30 மணியளவில் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈபிடிபி) உறுப்பினர்களான செங்கலடி உமா மில் வீதிச் சேர்ந்த 31 வயதுடைய கண்ணன் எனப்படும் சின்னத்தம்பி சீனிவாசன் மற்றும் 29 வயதுடைய குட்டி எனப்படும் சித்திரவேல் வசந்தன் ஆகிய இருவரும் துப்பாக்கிதாரிகளினால் சுட்டுக் கொன்றுள்ளனர்.

Sunday, August 26, 2007

ராஜபக்‌ஷ ஆட்சியின் தேனிலவின் முடிவடைவு - பீஷ்மர்

* ஊழல் புகார் உச்சக்கட்டத்தில்
* மனித உரிமை மீறற் குற்றச்சாட்டு
* 2008 இல் இலங்கைக்கான அமெரிக்க உதவிகளில் பாரிய வெட்டு
* அரசியல் எதிர்ப்பும் ஒருங்கிணைகின்றது
கடந்த வாரத்து நிகழ்ச்சிகளை ஒன்றுதிரட்டி நோக்கினால் இந்த ஆட்சி பற்றிய மறுதலிக்க முடியாத சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன என்பதை மறுக்க முடியாது.
ஊழல் பற்றிய புகார்கள் பாராளுமன்றத்தில் அப்பட்டமாகவே பேசப்பெற்றுள்ளன. ஊழல் நடவடிக்கைகளில் உயர் அதிகாரிகளே ஈடுபட்டுள்ளனர் என்பதும் ஒழுங்குவிதிகளின் படி அவர்களையொன்றும் செய்யாத வகையில் ஊழல்கள் நிறைந்துள்ளன. ஊழல்கள் பற்றிய இந்தக் குற்றச்சாட்டுகள் மிக முக்கியமானவையாகும். ஏனெனில், அரசாங்க நிர்வாக அமைப்பே முற்றிலும் சீர்குலைந்து கொண்டு செல்கின்றமையையே இது காட்டுகின்றது. மறுபுறத்தில் அரசியல் நிலைப்பட்ட எதிர்ப்பு வரவர பலமடைகின்றது.
யூ.என்.பி.- மங்கள இணைவு நிச்சயமாகியிருப்பது மாத்திரமல்லாமல் அண்மையில் இலங்கை திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் தெட்டத்தெளிவாகவே அரசாங்கத்தை சாடியுள்ளார். இதுவொரு சுவாரஸ்யமான நிலைமையாகும். இன்னும் சில வாரங்களுள் சுதந்திரக் கட்சி உண்மையில் யாருக்கு சொந்தமென்பது பெரிய பிரச்சினையாகப் போகின்றது.
பாதுகாப்புக்குப் பொறுப்பான செயலாளர் அண்மையில் நடந்தவொரு தொலைக்காட்சி நேர்காணலில் யுத்தம் மேற்கொண்டு செல்லப்படுமென்பதையும் அதற்கான திறமைகொண்ட "ஜாதிய நாங்கள்" என்றும் கூறியுள்ளார். இங்கு ஜாதிய எனும் பொழுது எதனைக் கருதினார்? அவருடைய நேர்காணல் யுத்தம் பற்றியே பேசிற்றாம். முப்படையினரதும் இணை நிலை பற்றிய குறிப்பும் வந்தது.
பொருளாதார நிலையில் விலைவாசிகள் இறங்குவதற்கான சாத்தியப்பாடே இல்லாதுள்ளது. இவை யாவற்றுக்கும் மேலாக அமெரிக்கா 2008 இலிருந்து இலங்கைக்கான தனது பொருளாதார, படைத் தேவைகளுக்கான நிதி உதவிகளை குறைத்திருப்பதாக `ஏசியன் றிபியூன்' செய்தி வெளியிட்டுள்ளது. அத்தகவலின் படி 2006 இல் வழங்கப்பெற்ற 14 கோடியே 5 இலட்சத்து 27 ஆயிரம் அமெரிக்க டொலர்களுக்கு பதில் 2008 இல் 6 கோடியே ஒன்பதரை இலட்சம் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே வழங்கப்படலாமென அமெரிக்க செனற்றில் நிதியுதவிக் கண்காணிப்புக் குழு தீர்மானித்திருப்பதாக அத்தகவல் கூறுகின்றது.
இந்த விடயம் பற்றிய ஆய்வுக்குறிப்பில் எடுத்துக் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான விடயம் ராஜபக்‌ஷ அரசாங்கம் ஒன்றுக்கொன்று முரணான கூற்றுகளைக் கூறுவது மாத்திரமல்லாமல் பாதுகாப்புச் சேவைகளை பொறுத்தவரையில் மனிதவுரிமை மீறல்களை அவை செய்கின்றன என்ற குற்றச்சாட்டும் கூறப்படுகின்றது. விடுதலைப் புலிகளை சாடுகின்ற அதேவேளை அரசாங்கத்தின் மனிதவுரிமைச் செயற்பாடுகள் பற்றிய கண்டனமும் தெரிவிக்கப்பெற்று அந்த அடிப்படையிலேயே இந்த நிதி வெட்டு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வுக் குறிப்பு கூறுகின்றது.
அந்த ஆய்வுக் குறிப்பிலே கூறப்பட்டுள்ள முக்கியமான விடயம் என்னவெனில் ராஜபக்‌ஷ அரசாங்கம் தனது செயற்பாடுகள் பற்றி சர்வதேச சமூகத்துக்கு, அமெரிக்காவுக்கு எடுத்துக் கூறுவதற்கான ஒரு சிந்தனை நோக்கினை இன்னும் வளர்த்துக் கொள்ளவில்லை என்பதாகும். அமைச்சர்கள் ஒவ்வொருவர் ஒவ்வொருவிதமாக கூறுவதும் அந்த முரண் நிலைகளும் அரசாங்கத்தின் நம்பகத்தன்மையை வெகுவாக குறைத்துள்ளன என்பதும் இந்த விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தவில்லையென்றும் அது கூறுகின்றது.
இலங்கையில் அரசியல் யதார்த்த பின்புலத்தில் அமெரிக்க நிதிவெட்டையும் மற்றைய அரசியற் காரணிகளையும் ஆராய வேண்டியதொரு தேவையுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்தப் பணியை மேற்கொள்வதற்கான புத்திஜீவிகள் அனுசரணை இந்த அரசாங்கத்துக்கு நிச்சயமாக இல்லை. ஏனெனில், இன்றுள்ள நிலையில் இந்த அரசாங்கத்துக்கான கருத்து நிலை எடுகோள் எதுவுமில்லை. மகிந்த சிந்தனை பற்றிப் பேசுவது வெகுவாக குறைந்துவிட்டது. யூ.என்.பி. மேலுக்கு வருவதை விரும்பாத ஜே.வி.பி. தனது மாணவர் அணி, தொழிற்சங்க அணிகளை எவ்வித ஒளிவுமறைவுமின்றி அரசாங்கத்துக்கு எதிராக பயன்படுத்த தொடங்கியுள்ளது. சென்றவாரம் நடந்த பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பேரணி இதற்கு நல்ல உதாரணமாகும். இந்த ஜனாதிபதியின் ஆட்சிக்கு இன்னும் ஏறத்தாழ 4 வருடங்கள் உள்ளதெனினும் அதற்கான திட்டமிடல் திருஷ்டி எதுவுமிருப்பதாக தெரியவில்லை.
இந்த பின்புலத்திலே தான் யூ.என்.பி. பாராளுமன்ற நிலையில் கிளப்பும் விவாத உஷ்ணம் கருத்துள்ளதாகின்றது. ஜனாதிபதி நிறைவேற்று அதிகாரமுடையவராக இருந்தாலும் அது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டதொரு அமைச்சரவை மூலமாகவே ஆட்சி நடைபெறவேண்டும் என்பது விதியாகும். யூ.என்.பி.யின் முழு முயற்சியும் இப்பொழுது அந்தப் பாராளுமன்ற தளத்தை சீர்குலைய வைப்பதுதான்.
கடந்த இரண்டு வாரகால நிகழ்ச்சிகளை பார்க்கின்றபொழுது ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேயை தவிர மற்றைய அமைச்சர்மார் இந்த எதிர்ப்புகள் பற்றி அதிகம் அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை.
மேற்கூறிய விடயங்கள் எவற்றையும் தனித்தனியாகவும் ஒருமித்தும் பார்க்க வேண்டிய அவசியம் அரசியல் மாணவர்களுக்கு அத்தியாவசியமானது. இங்கிருந்து எங்கே என்ற ஒரு பெரும் வினாவினை ஆங்கில பாரம்பரியத்தில் லத்தீன் மொழியில் கேட்பார்கள். கிதணி.திச்ஞீடிண் என்பது பிரசித்தமான லத்தீன் சொற்றொடர் ராஜபக்ஷ பற்றியும் இந்த வினாவினை எழுப்பலாம். அதற்கான காலம் கனிந்துவிட்டது.
2007 இலேயே இத்தனை கஷ்டங்களை எதிர்கொள்ளும் இந்த அரசாங்கம் 2008 இல் இந்த நிதி வெட்டுகளுடன் எவ்வாறு தன்னைத்தானே சமாளித்துக்கொள்ளப் போகின்றது என்பது மிகப்பெரிய பிரச்சினையாக உருவாகும். அந்த இலக்கை நோக்கியே ரணிலின் படையணி முன்னேறுகின்றது என்று கூடச் சொல்லலாம்.
இதனை தமிழர் நிலைப்பட நின்று நோக்கும் பொழுது இதனை எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி ஆழமாக சிந்தித்தல் அவசியமாகும். தமிழர்களுக்கு நியாயபூர்வமான குறைபாடுகள் உள்ளன என்பதை எல்லோருமே ஒப்புக்கொள்கின்றனர். அந்த நியாயபூர்வமான கோரிக்கைகள் பற்றி எதுவும் செய்யாமல் பாதுகாப்புப் படையினரால் மனிதவுரிமை மீறல்கள் நடைபெறுகின்றன என்பதும் இப்பொழுது தெளிவாகிவிட்டது. ஆனால், பயங்கரவாதம் என்ற சொல்லையும் அவர்கள் பயன்படுத்தத் தவறவில்லை. அதற்குள்ளே அரசியல் தாற்பரியம் உள்ளது என்பதை மறுக்கமுடியாது. இலங்கையினுள் தமிழருக்குள்ள இன்னல்கள் குறித்து விரிவான எடுத்துரைப்புகள் சர்வதேச மட்டத்திலே செய்யப்பட வேண்டும். அதற்கானதொரு சிந்தனை முகாம் அவசியம். இது பற்றிய ஆழமான சிந்தனையும் அவசியமாகும்.

நன்றி: தினக்குரல்